யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள்

பாரீஸ்,

கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இதனால், இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்து உள்ளது.

இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது.

இதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவுக்கு அதிக பெருமை கிடைத்துள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில், பிரமிக்க செய்யும் புனித தோற்றம் கொண்ட ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார். காலவரையற்ற அழகு மற்றும் சிக்கலான விவரங்களை கொண்ட ஒய்சாலா கோவில்கள் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான தக்க சான்றாக உள்ளது.

நம்முடைய முன்னோர்களின் தனிச்சிறப்புடனான கைவினை திறனை விளக்கும் வகையிலும் உள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன், கவிஞர் மற்றும் தத்துவயியலாளரான ரவீந்திரநாத் தாகூரால், கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம். இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

இந்நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கடந்த 17-ந்தேதி நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.