முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திரப் பிரதேசத்தில், அடுத்தாண்டு லோக் சபா தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்கூட இல்லாத நிலையில், ஆந்திர எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, 2014-ல் முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட சம்பவம், அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டத்தை நடத்திவந்தனர். அதையடுத்து, சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது விவகாரம் தொடர்பாக ஆந்திர சட்டமன்றத்தில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ-க்கள், சபாநாயகரை சூழ்ந்துகொண்டு அமளியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில், நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா, சட்டமன்றத்தில் இன்று தொடையைத் தட்டி மீசையை முறுக்க அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலுக்கு எதிர்வினையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் அம்பாதி ராம்பாபு, “இதையெல்லாம் சினிமாவில் வைத்துக்கொள்ளுங்கள், இங்கே வேண்டாம். தைரியம் இருந்தால் அருகில் வாருங்கள்” என்று கூறவே, அவையில் இரு தரப்புக்கிடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அதையடுத்து, சபாநாயகர் தம்மினேனி சீதாராம், சபைக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என்று பாலகிருஷ்ணாவைக் கண்டித்து, மீண்டும் இவ்வாறு செய்யக் கூடாது என எச்சரித்தார். இந்த நிலையில், சபையின் கண்ணியத்தை மீறியதாக, தெலுங்கு தேசம் கட்சியில் 15 எம்.எல்.ஏ-க்களையும், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரையும் சபாநாயகர் தம்மினேனி சீதாராம் இடை நீக்கம் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.