ஓம்காரேஷ்வர்: மத்தியப் பிரதேசத்தின் ஓம்காரேஷ்வர் நகரில் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட 108 அடி உயர பிரம்மாண்ட ஆதிசங்கரர் சிலையை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் திறந்து வைத்தார்.
இன்றைய கேரளாவின் காலடியில் 1,300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த தமிழரான ஆதிசங்கரர், அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர். அவர் தனது குரு கோவிந்த பகவத் பாதரை சந்தித்த இடம் ஓம்காரேஷ்வர். தற்போதைய மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்த நகரில் 4 ஆண்டுகள் தங்கி குரு மூலம் ஆதிசங்கரர் கல்வி கற்றுள்ளார்.
ஆதிசங்கரர் கல்வி கற்ற நகரான ஓம்காரேஷ்வரில் அவருக்கு மத்தியப் பிரதேச அரசு பல்வேறு உலோகங்களைக் கொண்டு 108 அடி உயர பிரம்மாண்ட சிலையை அமைத்துள்ளது. இந்த சிலையின் பீடம் மட்டும் 54 அடி. 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற ஓம்காரேஷ்வர் நகரில் ரூ. 2,141.85 கோடியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையின் சிலை (ஏகாத்மதா கி பிரதிமா) என சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், துறவிகள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைதீக முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க சிலை திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் சிவராஜ் சிங் கவுகான், பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.