6-ம் நாள் திருப்பதி பிரம்மோற்சவம் | அனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி: தங்க தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும், மாலை தங்க தேரிலும், இரவு யானை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 9 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று புரட்டாசி முதலாவது சனிக்கிழமை என்பதால் திருமலையில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது. அதிலும் பிரம்மோற்சவம் நடைபெற்று வருவதால் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக இருந்தது.

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில், கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவரான மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாடவீதிகளில் மலையப்பருக்கு திரளான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். மாடவீதிகளில் கலை நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றன.

தங்க தேரோட்டம்: அனுமன் வாகன சேவை காலை 8 மணிக்கு தொடங்கி 10 மணி வரை நடைபெற்றது. இதையடுத்து மாலை 4 மணி முதல் 5 மணி வரைதங்க தேரோட்டம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள்பங்கேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி,பூதேவி சமேத மலையப்பரை வழிபட்டனர். இதில் குறிப்பாக பெண்கள் அதிகமானோர் பங்கேற்றுதேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கஜ வாகன சேவை: தங்கத் தேரோட்ட நிகழ்ச்சிக்கு பிறகு, இரவு கஜ வாகன சேவை நடைபெற்றது. இதில், உற்சவரான மலையப்பர் தங்க கஜ வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.