திருப்பூரில் 10 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்: 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு – ரூ.500 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என கணிப்பு

திருப்பூர்: மின் நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழக மின்வாரியம் சார்பாக உயர்த்தப்பட்டுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும் , பரபரப்பு நேர கட்டணம் , சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் , மல்டி இயர் டாரிப் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரத போராட்டமும் , தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் கடிதம் மற்றும் இமெயில் அனுப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்படாத நிலையில் இன்று (செப். 25ம் தேதி) தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் நெட்டிங் எம்ராய்டரி பிரிண்டிங், சாய அலைகள் என 19 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி, இன்று கதவடைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 3 லட்சம் தொழிலாளர்களுக்கு இன்று வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.

திருப்பூரை பொருத்தவரை மூலப் பொருட்கள் விலையேற்றும் காரணமாக தொழில் நலிவடைந்து வந்த நிலையில் மின்வாரியத்தின் நிலை கட்டணம் மற்றும் பரபரப்பு நேர கட்டணம் காரணமாக தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் , தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் திருப்பூரில் தொழில்துறை மிகவும் நலிவடையும் எனவும் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையிலும் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்,

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.