வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தெரிவித்த கவலைகள் எங்களுக்கு மிகவும் முக்கியம் எனக்கூறியுள்ள இலங்கை, இதுவரை சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஷியான் 6 என்ற சீன ஆராய்ச்சி கப்பல் வரும் அக்., மாதம் இலங்கை வர அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையில் இருந்தவாறு தென் இந்தியாவின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை சீனா கண்காணிக்கும் அபாயம் உள்ளது என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்தது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சீன கப்பல் தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வழக்கமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதனடிப்படையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பேசி வருகிறோம்.
எனக்கு தெரிந்தவரை, இலங்கை வருவதற்கு சீன கப்பலுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவின் கவலைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். நமது பிராந்தியத்தை எப்போதும் அமைதியாக வைத்திருப்போம் என கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு புகலிடம்
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சாப்ரி கூறுகையில், பல பயங்கரவாதிகளுக்கு கனடா புகலிடத்தை அளித்துள்ளது. எந்தவித ஆதாரமும் இன்றி, சில மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ளார். இதேபோன்ற நடைமுறையை தான் அவர்கள் இலங்கைக்கு எதிராக கடைபிடித்தனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக பொய் கூறினர். ஆனால், இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த குற்றச்சாட்டால், இலங்கை கனடா இடையிலான உறவு பாதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement