சிங்கம் போன்ற படங்கள் சமூகத்திற்கு தவறான செய்தியை சொல்கின்றன : உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

பொதுவாகவே சினிமாக்களில் முன்னணி ஹீரோக்கள் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கும் படத்திற்கு ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு இருக்கின்றன. கடந்த சில காலங்களில் கணக்கெடுத்து பார்த்தால் சாமி, காக்க காக்க, சிங்கம், வேட்டையாடு விளையாடு என அதிரடி போலீஸ் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக சிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு தான் அதற்கு மூன்று பாகங்கள் எடுக்கும் அளவிற்கு கொண்டு சென்றது. இந்த சிங்கம் திரைப்படம் ஹிந்தியில் அஜய் தேவகன் நடிப்பில் சிங்கம் என்கிற பெயரிலேயே ரீஎமேக் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வெற்றி பெற்றது. அந்த படத்தின் மூன்றாம் பாகம் சமீபத்தில் துவங்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிங்கம் போன்ற படங்கள் மக்களுக்கு தவறான செய்தியை கொண்டு செல்கின்றன என்று எனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல். சமீபத்தில் காவல்துறை சீரமைப்பு நாள் ஆண்டு விழா தினத்தன்று இந்திய போலீஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதி கவுதம் பட்டேல் பேசும்போது, “நம் நீதிமன்ற நடைமுறைப்படி நியாயத்தை பெறுவதற்கு சற்றே பொறுமையும் அமைதியும் அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களிடம் அப்படி பொறுமை காக்கும் எண்ணம் இல்லை. அதனால் தான் சிங்கம் போன்ற படங்களில் காவல்துறை அதிகாரிகளாக நடிப்பவர்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நீதிபதிகளாக மாறுவதை பார்த்து மக்கள் சந்தோஷப்படுகின்றனர்.

ஆனால் இதுபோன்ற படங்கள் மக்களுக்கு நிச்சயம் தவறான செய்தியை கொண்டு செல்கின்றன. எப்போதும் சட்டத்தின் வாயிலாக நேர்வழியில் தான் நீதியை பெறவேண்டும் குறுக்கு வழியில் அதை தேடக்கூடாது. திரைப்படம் எடுப்பவர்களும் அதில் நடிக்கும் நடிகர்களும் தாங்கள் சமுதாயத்திற்கு சரியான ஒரு செய்தியை கொண்டு செல்கிறோமா என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.