கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.
தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. குறிப்பாக திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாபாத்திரம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
தற்போது தெலுங்கில் அவரது நடிப்பில் ‘குமாரி ஸ்ரீமதி’ என்ற தொடர் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி இந்த தொடர் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நித்யா மேனன், ‘தமிழ் நடிகர் தன்னை துன்புறுத்தியதாக’ கூறியதாக சமூக வலைதளங்களில் சிலர் வதந்திகளைப் பரப்பி வந்தனர்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை நித்யா மேனன், ‘இது முற்றிலும் தவறான செய்தி. அப்படி நான் எந்த ஒரு நேர்காணலும் கொடுக்கவில்லை. இந்த போலிச் செய்தியைப் பரப்பியது யார் என்று அடையாளம் காட்டுங்கள்.
மிகக் குறுகிய காலத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது.
வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்வதால் மட்டுமே மோசமான நடத்தையை நிறுத்த முடியும் என்பதால் இன்று இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். சிறந்த மனிதர்களாக இருங்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.