‘இது என் கடைசி உலக கோப்பை’ ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்

உலக கோப்பைக்கான இந்திய அணி

உலக கோப்பைக்கான இந்திய அணியில் கடைசிநேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். முதன்முறையாக உலக கோப்பை அணி தேர்வு குறித்த பேச்சு எழும்போது அஸ்வின் பெயர் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. திடீரென அக்சர் படேல் காயமடைந்ததால் அதிர்ஷ்ட காற்று அஸ்வின் பக்கம் வீசியது. ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததால், நேரடியாக உலக கோப்பை அணிக்கு தேர்வாகிவிட்டார்.

அஸ்வின் வைத்திருந்த நம்பிக்கை

அவரின் இந்த பயணம் என்பது நிச்சயம் கத்திமேல் நடப்பது போலவே இருந்தது. அக்சர் படேல் காயமடைந்திருக்காவிட்டால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்த வாய்ப்பில் அவர் ஒழுங்காக பந்துவீசாமல் இருந்திருந்தால் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் உலக கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அனைத்து வாய்ப்புகளுக்கான காற்றுமே அஸ்வின் பக்கம் வீசியதால் தற்போது உலக கோப்பையில் விளையாடும் பிளேயிங் லெவனில் இருக்கிறார். இது அவர் வைத்திருந்த விடாப்பிடியான நம்பிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே பார்க்கப்படுகிறது. 

அஸ்வின் என்ன சொல்லியிருக்கிறார்? 

இது குறித்து அஸ்வின் பேசும்போது, ” நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இந்திய அணியில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக விளையாட்டை ரசிப்பதே எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். இந்த போட்டியில் மீண்டும் அதை செய்ய விரும்புகிறேன். என்னை கேமரா முன் நிறுத்தக்கூடாது என்று மீடியா நபரிடம் சொன்னேன். ஆனால் அவர் உங்களை தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்று சொன்ன காரணத்தினால் வந்தேன். என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட் போட்டியை அனுபவிக்க வேண்டும். அதனை முழுமையாக செய்கிறேன் என்று நம்புகிறேன். இது எனக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். அதனால், அனைத்து போட்டிகளையும் ரசித்து விளையாடுவதுதான் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.