நாடாளுமன்ற தேர்தல் பணி | தென்மாநில முழு நேர ஊழியர்கள் தேர்வில் பாஜக தீவிரம்

மதுரை: நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் பாஜக முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ளன. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு தொகுதியில் வெற்றிப்பெற திட்டமிட்டுள்ள அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்டதால், பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென் மாநிலங்களில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை பூத் அளவில் நிர்வாகிகளை நியமித்து வீடு வீடாக செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. இது தவிர மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் முக்கிய நபர்களை சந்தித்து அவர்களிடம் கட்சியின் கொள்கையை சொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியுடன் கட்சியை பலப்படுத்தும் பணிக்காகவும் முழு நேர ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பகுதிகளிலும் பாஜக முழு நேர ஊழியர்களை தேர்வு செய்யவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்புக்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசனை இன்று நியமனம் செய்து பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இவர் விரைவில் தென் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பாஜக முழு நேர ஊழியர்களை தேர்வு செய்யவுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.