மாலே ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்,” என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபர் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவ படைகள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றப்படும்,” என, தெரிவித்தார்.
மாலத்தீவில் இந்திய ராணுவம் மட்டுமே முகாமிட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியா என பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
மாலத்தீவு அதிபராக பதவி வகித்து வரும் இப்ராஹிம் முகமது சோலிஹ், இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இவருக்கு முன் பதவியில் இருந்த அதிபர் அப்துல்லா யமீன், சீனாவுக்கு நெருக்கமாக இருந்தார். மாலத்தீவில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளில் சீனா முதலீடு செய்தது.
ஊழல் வழக்கில் சிக்கி இவர் சிறை சென்ற பின் புதிய அதிபராக பதவி ஏற்ற இப்ராஹிம் முகமது சோலிஹ், சீனாவிடம் இருந்து விலகியே இருந்தார். இந்தியாவுடன் பரஸ்பரம் நல்லுறவை பேணி வந்தார்.
தற்போது, முகமது முயீஸ் அதிபராக பதவி ஏற்க உள்ளதை தொடர்ந்து, மாலத்தீவு – சீனா உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
இது, தென் சீன கடல் பகுதியின் பாதுகாப்பில் இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement