கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், 5 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி, கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின் பதவிக்காலம் அமலுக்கு வருவதால், 2024-ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்க நடவடிக்கையில் தலையிட தடை விதிக்கக் கோரியும், கூட்டுறவு சங்கங்களை கலைக்க தடை கோரியும் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே, பதவிக் காலம் துவங்குவதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சின்னசாமி என்பவர் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான், உறுப்பினர்களின் பதவிக் காலம் துவங்குகிறது. இந்த வழக்கில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம், முதல் கூட்டம் நடந்ததால், அதன் பிறகே பதவிக் காலம் துவங்கும். எனவே, 2024-ம் ஆண்டு ஜூன் வரை பதவிக் காலம் உள்ளது” என்று வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “2018-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானது என்பதால், அன்றைய தினம் முதல் பதவிக் காலம் துவங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து பதவிக் காலம் துவங்குகிறதா? முதல் கூட்டம் நடந்த நாளில் இருந்து துவங்குகிறதா? என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை நியமித்த உத்தரவை பொறுத்தவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.