கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினரின் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம்

மதுரை: கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை பழங்காநத்தத்தில் இன்று தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் சார்பில் கூட்டுறவு வங்கிகளை பயனற்ற திட்டங்களுக்கு நிதியை முதலீடு செய்யுமாறு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு அலுவலக சாவிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு அச்சங்கத்தின் கவுரவ செயலாளர் ஆசிரியத்தேவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.ராஜா முன்னிலை வகித்தார். இதில், மாவட்டப் பொருளாளர் பாரூக்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில், மாவட்டச் செயலாளர் கணேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், “தமிழகத்தில் 4300 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், உரம் விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்துவருகிறோம். மேலும், வேளாண் சேவை மையம் என்ற திட்டத்தில் ஏற்கெனவே வாங்கப்பட்ட உழவு இயந்திரம், டிராக்டர், கதிரறுக்கும் இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் பயனற்று துருப்பிடித்து கிடக்கிறது.

இந்நிலையில், மீண்டும் கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள், லாரி, டிராக்டர், அறுவடை இயந்திரங்கள், டிரோன் என வாங்க ரூ.2 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இதனை கைவிடும் வரை தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இதில் மதுரை மாவட்டத்திலுள்ள 170 சங்கங்களைச் சேர்ந்த 500 பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.