சென்னை: சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசின் இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவுப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவு மற்றும் 1998-ம்ஆண்டின் அரசாணையை எதிர்த்தும், தங்களது கல்லூரிக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்ககோரியும் அந்த கல்லூரி நிர்வாகம்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டத்தின்படி, இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அந்த ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இதில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை’’ என கூறி தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டுகொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என தீர்ப்பளித்த நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கும் மேலாக உள்ள எஞ்சிய இடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் சிறுபான்மையின மாணவர்கள் போட்டியிடலாம் என்றும், அப்படி சேர்க்கை வழங்கும்பட்சத்தில் அது நிபந்தனையை மீறியதாக கருத முடியாது என்றும் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர்.