மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 3 கர்ப்பிணிகள் மரணத்தில் தமிழக அரசு நீதி விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செப்டம்பர் முதல் வாரத்தில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர். இதற்கிடையில் செப்.29-ம் தேதி மேலும் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் 70-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நிகழ்வதும், தரமான பிரசவ சிகிச்சை அளிக்கப்படும் என்பது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், தற்போது நிகழ்ந்துள்ள கர்ப்பிணிகள் மரண சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நிகழ்ந்துள்ள உயிரிழப்புக்களால் அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையை குறைக்கும்.
எனவே, கர்ப்பிணி பெண்கள் மரணம் குறித்த சம்பவங்களில் முறையான நீதி விசாரணை செய்யவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாத வண்ணம் தகுந்த மருத்துவ பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் தொகை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.