சட்ட விரோதமாக விளம்பர பேனர் வைத்தால் கிரிமினல் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்திருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி விளம்பர பலகைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், விதிகளைமீறி செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், அவர்களுக்கு எதிரான குற்ற வழக்கு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘சட்டத்துக்கு புறம்பாக தமிழ்நாட்டில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. சட்ட விரோதமாக விளம்பர பலககைகள் வைப்பவர்கள்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு தரப்பில் கூறப்படுவதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.