முத்தையா முரளிதரன் இந்த மண்ணின் மகன் : ‛800' பட இயக்குனர் புகழாரம்

சில ஆண்டுகளுக்கு முன்பு 'கனிமொழி'என்ற படத்தை இயக்கியவர் எம்.எஸ்.ஸ்ரீபதி. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கி உள்ள படம் 800. இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இது உருவாகி உள்ளது. நாளை இந்த படம் வெளிவருகிறது.

படம் பற்றி ஸ்ரீபதி கூறியிருப்பதாவது: சில படங்களே திரைப்பட இயக்குநர்களுக்கு முழு திருப்தியைத் தரக்கூடியதாக இருக்கும். இதுபோன்ற படங்கள் அரிதாகவே நிகழ்கின்றன. தனது கனவுகளை நிலைநிறுத்த அனைத்து எல்லைகளையும் தாண்டிய ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்குவதற்கு நான் பாக்கியம் செய்தவனாகவும் ஆசீர்வதித்தவனாகவும் உணர்கிறேன். அவரது பூர்வீகம் தமிழ்நாடு என்பதால், அவரை எப்போதும் தங்கள் 'மண்ணின் மகன்' என்றே ரசிகர்கள் கருதினர்.

அத்தகைய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை உருவாக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். '800' ஒரு அழகான கதையைக் கொண்டுள்ளது. இது கிரிக்கெட் பார்க்காதவர்களைக் கூட மகிழ்விக்கும். புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது பெரிய கேன்வாஸில் சொல்லப்பட வேண்டிய கதை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்திற்கு தனது இயல்பான நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் மதுர் மிட்டல்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.