கிராமசபைக் கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியைத் தாக்கிய ஊராட்சிச் செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231006_WA0038.jpg)
காந்தி ஜெயந்தி தினத்தில் விருதுநகர் மாவட்டம் ,ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில், கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை, ஊராட்சிச் செயலாளர் தங்கபாண்டியன் தாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் வீடியோ வெளியாகி தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.
அதையடுத்து, உடனே தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீஸார் வழக்கு பதிவுசெய்ததையடுத்து, தங்கபாண்டியன் தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/31042_thumb.jpg)
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன், “கடந்த 2-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின்போது விவசாயி அம்மையப்பன் என்பவரை கை, காலால் தாக்கியதற்காக வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவத்துக்கு மிகவும் வருந்துகிறோம், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். என்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
“கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பொது இடத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விவசாயிமீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது சட்ட ஒழுங்கு பிரச்னை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231006_WA0042.jpg)
விவசாயி அம்மையப்பன் தரப்பு வழக்கறிஞர், “ஊராட்சிச் செயலரான தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்தையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, “தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.