சென்னை: அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கத்தின் மாநிலதலைவர் கதிரேசன், போக்குவரத்துறை அமைச்சருக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்து கழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து, மிக குறைவான ஓய்வூதியத்தை பெற்று வரும் 92 ஆயிரம் ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு, 92 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்த்திவழங்கிட வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
ஓய்வூதியர்களின் நலன்களை பாதுகாத்திட நடைபெற இருக்கும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மாநில அளவில் பதிவுபெற்ற 10 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தையும் அழைத்து பேச வேண்டும்.
இவ்வாறு தமிழக போக்குவரத்துறை அமைச்சருக்கு ஓய்வூதியர்கள் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.