விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவருக்கு சரவணகுமார் (வயது 24), ராஜா (21), கந்தசாமி என்ற சசிகுமார் (18) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகனான சரவணகுமாருக்கு திருமணம் முடிந்து, தந்தையின் வீட்டுக்கு அருகே மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருடைய இளைய சகோதரர் சசிகுமார், சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு, ஊர் சுற்றிவந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரவில், மதுபோதையில் வீட்டில் உறவினர்களுடன் வீண் பிரச்னை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (10-ம் தேதி) காலையில், கந்தசாமி வீட்டில் உள்ள அறையில் சசிகுமார் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், கொலை குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231011_WA0007_2.jpg)
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சசிகுமாரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக சசிகுமாரை, உடன்பிறந்த அண்ணன் சரவணகுமாரே குத்திக் கொலைசெய்தது தெரியவந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/IMG_20231011_WA0010.jpg)
இதைத் தொடர்ந்து தலைமறைவான சரவணகுமாரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சரவணகுமாரை போலீஸார் இன்று கைதுசெய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் நம்மிடம் தெரிவிக்கையில், “கைதுசெய்யப்பட்ட சரவணகுமாரிடம் விசாரணை நடத்துகையில், ‘தம்பி சசிகுமார் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் அனைவருடனும் தகராறு செய்து வந்தான். அவன் இம்சையால் எனக்கும், என் மனைவிக்கும் இடையேயும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக என் மனைவி, என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதில் மன உளைச்சலில் இருந்த நான், நேற்று முன்தினம் இரவு (9-ம் தேதி) மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தேன்.
அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சசிகுமாரைப் பார்க்கையில், என் மனைவி என்னை பிரிந்து சென்றதற்கு அவன்தான் காரணம் என்று தோன்றியது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், கத்தியால் அவனைக் குத்திக் கொலைசெய்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளான்” என்றனர். இதைத் தொடர்ந்து சரவணகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.