சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்

அமராவதி,

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில், அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு மற்றும் அங்கல்லு கலவர வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனுத்தாக்கல் செய்தார்.

அதன்படி, அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் வரும் 16 ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக்கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அங்கல்லு கலவர வழக்கிலும் நாளை வரை யாரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் ஆந்திரா சிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிஐடி விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உள்வட்ட சாலை மோசடி வழக்கில் பிடிவாரண்டை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.