புதுடெல்லி: இஸ்ரேல்-காசா இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் 24 மணி நேர உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்ரேல்-காசா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள இந்த சவாலான காலகட்டத்தில் இந்திய குடிமக்களுக்கு உதவுவதற்காக இந்திய தூதரகம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள், உதவி கோருபவர்கள், தூதரகத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் 972-35226748 மற்றும் 972-543278392 எண்களில் எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுவதுடன், அவ்வப்போது வெளியிடப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும், நிலைமை சீரடையும் வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.