வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நடப்பாண்டுக்கான உலக பட்டினி குறியீட்டு பட்டியலில் இந்தியா 111வது இடத்தை பிடித்துள்ளது. இதனை நிராகரித்துள்ள மத்திய அரசு, ‛‛ பசியால் பாதிக்கப்பட்ட அளவு துல்லியமற்ற முறையில் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மிகச்சிறிய அளவிலான கணக்கெடுப்பு அடிப்படையில் நாட்டின் பட்டினி அளவை கணக்கீடு செய்ய முடியாது” என விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தி உள்ளது. 125 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியா 111வது இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம் , நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102வது இடத்திலும், வங்கதேசம் 81வது இடத்திலும், நேபாளம் 69 வது இடத்திலும், இலங்கை 60வது இடத்திலும் உள்ளன.
நிராகரிப்பு
உலக பட்டினி குறியீட்டு அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. பசியால் பாதிக்கப்பட்ட அளவு துல்லியமற்ற முறையில் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மிகச்சிறிய அளவிலான கணக்கெடுப்பு அடிப்படையில் நாட்டின் பட்டினி அளவை கணக்கீடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த குறியீடு தீவிரமான வழிமுறை சிக்கல்களால் பாதிக்கப்படுகிறது. தவறான நோக்கத்தை காட்டுகிறது. குறியீட்டை கணக்கிட பயன்படுத்தப்படும் நான்கு அளவீடுகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. அவை ஒட்டுமொத்த மக்கள் தொகையை பிரதிநிதிப்படுத்துவதாக இருக்க முடியாது.
நான்காவது மற்றும் மிக முக்கியமான காரணம் 3,000 என்ற மிகச்சிறிய மாதிரி அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடுகளை பிரதிபலிக்காது. ஏப்.,2023 முதல் போஷன் டிராக்கரில் பதிவேற்றப்பட்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அளவீட்டுத் தரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 2023ல் 6.34 கோடியில் இருந்த அந்த எண்ணிக்கை செப்டம்பரில் 7.24 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement