காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுத்தாளர் அருந்ததி ராய் (61), காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் உசைன் உள்ளிட்ட சில தலைவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் என்பவர் கடந்த 2010-ம்ஆண்டு டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல், தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அருந்ததி ராய் உள்ளிட்டோர் மீது முன்வைக்கப்பட்டது. இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமானால் அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதற்காக மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.