வதோதரா: குஜராத்தின் வதோதராவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் உள்ளூர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மத்தியில், அவர் ஆற்றிய உரை: ”எந்த நபரும் எந்த கோயிலுக்குள்ளும் நுழைய உரிமை உண்டு. ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அகற்ற வேண்டும்.
எந்த நீர் ஆதாரத்தில் இருந்தும் தண்ணீர் எடுக்க அனைவருக்கும் உரிமை உண்டு. சாதி அல்லது தீண்டாமையின் பெயரால் இத்தகைய பாகுபாடுகளை நாம் சகித்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், அது ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இத்தகைய நடைமுறைகளை மட்டும் எதிர்க்காமல் அவற்றை ஒழிக்க தீவிரமாக செயல்பட வேண்டும்.
சனாதன தர்மத்தை அழிப்பதாக சிலர் மிரட்டுகின்றனர். ஹிந்துக்களை பற்றி பேசி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வகுப்புவாதமாக இருப்பதாகவும் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். சனாதன தர்மம் என்பது சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பற்றியது அல்ல. ஆனால், அது மனிதர்களில் கடவுளைக் காண்பது, நல்ல நடத்தை மற்றும் சமூகத்தின் நலனை அடைவதாகும்.
இந்தியாவும் அதன் மக்களும் யூதர்கள், பார்சிகள் மற்றும் தலாய் லாமா மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த விதத்தில், உலகம் ஒரே குடும்பம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பதை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை உள்ளது. இந்தியாவை உலகத் தலைவர் ஆக்கும் சக்தி ஹிந்து சமுதாயத்திற்கும், இந்திய மக்களுக்கும் உள்ளது. ஒரு நாள் இந்தியா உலகிற்கு வழி காட்டும். இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement