'ஆபரேஷன் அஜய்' | இஸ்ரேலில் இருந்து 28 தமிழர்கள் உள்பட மேலும் 235 இந்தியர்கள் மீட்பு

புதுடெல்லி: ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக இன்று 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28 பேர் தமிழர்கள். தாயகம் திரும்பியவர்களை வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார். முன்னதாக நேற்று 212 பேர் இஸ்ரேலில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், ”அடுத்தக்கட்டமாக இந்தியா செல்ல பதிவு செய்திருந்தவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பதிவு செய்த அனைவரும் இந்தியா அனுப்பிவைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலில்,18,000 இந்தியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் அஜய்: காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது. காசா மீது இஸ்ரேல் போர் தொடுப்பதால், இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை, அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை இந்தியா தொடங்கியது. இந்தியாவில் இருந்து சென்ற சிறப்பு விமானத்தில் முதல் கட்டமாக சுமார் 212 இந்தியர்கள் நாடுதிரும்பினர். இன்று (சனிக்கிழமை) 2 குழந்தைகள் உள்பட 235 பேர் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 28 தமிழர்களை டெல்லியில் தமிழகப் பிரதிநிதிகள் வரவேற்றனர். அவர்கள் இன்றைக்கே சென்னைக்கு அழைத்துவரப்படுகின்றனர். ஆபரேஷன் அஜய் மூலம் இந்தியர்கள் கட்டணமின்றி தாயகம் அழைத்து வரப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.