பெய்ரூட்: இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவாக சேர முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு வெள்ளிக்கிழை அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் ஹெஸ்புல்லா இயக்கத்தின் இணைத் தலைவர் நைம் காசிம் பேசுகையில், “இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் போரில் நாங்களும் இணையத் தயாராக இருக்கிறோம். எங்களின் நோக்கம் மற்றும் திட்டங்களுக்கு உட்பட்டு நாங்கள் தொடர்ந்து உதவிகளைச் செய்வோம். அதற்கு நாங்கள் முழுவதுமாக தயாராக இருக்கிறோம். நேரம் வரும்போது அதனைச் செய்வோம். வளர்ந்த நாடுகள், அரபு நாடுகள் மற்றும் ஐநா தூதர்கள் போரில் ஈடுபட வேண்டாம் என்று எங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறுகின்றனர். இது எதுவும் எங்களை பாதிக்காது. ஹெஸ்புல்லாக்களுக்கு அவர்களின் பணிகள் என்னவென்று தெரியும்” என்று கூறினார்.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட ஹெஸ்புல்லா ஆதரவாளர்கள் காசாவுக்கு ஆதரவாக பாலஸ்தீன கொடி மற்றும் பதாகைகளை ஏந்திப் பேரணி நடத்தினர். அந்தப் பதாகைகளில் “கடவுள் உங்களைப் பாதுகாக்கட்டும்” என்று எழுதப்பட்டிருந்தது. பேரணியில் பங்கேற்றோர் (ஹஸ்ஸன்) நஸ்ரல்லா, டெல் அவிவ்-ஐ தாக்குங்கள் என முழக்கம் எழுப்பினர்.
பெய்ரூட்டில் பிறந்த 57 வயதாகும் பாலஸ்தீன அகதியான நஜ்வா அலியும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அவர் கூறுகையில், “நான் பாலஸ்தீனத்தை பார்த்ததே இல்லை. ஆனால் ஒரு நாள் அங்கு திரும்பிப் போவேன். அந்த நாள், ஓர் இஸ்ரேலிய சிப்பாயி என்னை அங்கே போ, இதைச் செய் என்று கட்டளையிடாத, நான் தலைநிமிர்ந்து செல்லும் நாளாக இருக்கும்” என்றார்
இஸ்ரேல் சமீப நாட்களில் ஹெஸ்புல்லா மற்றும் லெபனானில் உள்ள பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் நடத்தியது. வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானின் எல்லையோரத்தில் நடந்த குண்டு வீச்சுத் தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார், ஆறு பேர் காயமடைந்தனர்.
முன்தாக, லெபனான் எல்லையிலிருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் செவ்வாய்க் கிழமை ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகளின் இருப்பிடங்களை நோக்கி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.