வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு வட கொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு சில ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சென்றது, தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த கிம் ஜாங் உன், ஆயுதங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து ரஷ்ய பயணத்தை முடித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய தன் ரயிலில் நாடு திரும்பினார்.
இந்நிலையில் ரஷ்யா – வட கொரியா இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகக் ஆதாரத்துடன் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருப்பதாவது:
சமீபத்திய வாரங்களில் வட கொரியா 1,000 க்கும் மேற்பட்ட ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளை ரஷ்யாவிற்கு வழங்கியதாக அமெரிக்காவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டுள்ள நிலையில், வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆழமாகிவரும் ராணுவ உறவு கவலை அளிக்கிறது. இந்த ஆயுதம் வினியோகம், உக்ரைனிய நகரங்களை தாக்க பயன்படுவதுடன், உக்ரைன் பொதுமக்களை கொல்லவும் பயன்படும். ரஷ்யாவின் சட்ட விரோத போர் தொடர வழி வகுக்கும். இவ்வாறு ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement