சங்கரய்யா டாக்டர் பட்டம்: “காந்தியடிகளையே வேண்டாமென்று சொன்னவர்கள்" – ஆளுநரைச் சாடிய பொன்முடி

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடி, தற்போது 101 வயதில் வாழும் வரலாறாகத் திகழும் சங்கரய்யாவுக்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவுசெய்திருக்கிறது. ஆனாலும், அதற்கான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துவருகிறார். இதனால், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், அரசியலுக்கு அப்பாற்பட்ட பலரும் ஆளுநர் ரவிக்கு கண்டங்கள் தெரிவித்துவருகின்றனர்.

தோழர் சங்கரய்யா

இப்படியிருக்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ளும் நிலையில், பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். அதோடு, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்காகத்தான் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்க ஆளுநர் ரவி மறுப்பதாகவும் பொன்முடி விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, “சுதந்திரப் போராட்ட வீரராக இருந்த ஒருவருக்கு, இன்றளவும் மக்களுக்காகக் குரல் கொடுத்துவரும் ஒருவருக்கு, கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் ஆளுநர் மறுத்திருக்கிறார். அதன் பிறகு மீண்டும் சிண்டிகேட் செனட் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறது. கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டம் 1965, அத்தியாயம் 20 தொகுதி ஒன்றில் ஆட்சிப் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் பொன்முடி

எந்தச் சட்டத்தையும் ஆளுநர் மதிப்பதில்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூகநீதி பேசுபவர்களைக் கண்டாலே இவர்களுக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார். முதன்முதலாக சங்கரய்யாவுக்கு `தகைசால் தமிழர் விருது’ வழங்கியபோதுகூட, அவருக்கு கொடுக்கப்பட்ட 25 லட்சத்தை வாங்காமல், `ஏழை மக்களுக்கு உதவுங்கள்’ என்று கூறியவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மறுக்கிறார்.

`சுதந்திரப் போராட்ட வீரர்கள்மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை’ என்று கூறும் இவர், கௌரவ டாக்டர் பட்டத்தைக் கொடுக்க வேண்டியதுதானே… எத்தனை முறை கோரிக்கை விடுத்தும் எதற்கும் அவர் செவி சாய்ப்பதாக இல்லை. அது என்ன செவி என்றே தெரியவில்லை. அவர், அந்தக் காலத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்தவர். அவர்களுக்கு சுதந்திரப் போராட்டக்காரர்கள் மீதெல்லாம் மதிப்பு கிடையாது. காந்தியடிகளையே வேண்டாம் என்று சொன்னவர்கள்தான் அவர்கள். அதிலிருந்து வந்தவர் என்பதால்தான் அந்த வெறித்தனத்தோடு பேசுகிறார். பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் ஆதரவாகத்தான் இதையெல்லாம் அவர் செய்கிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. தினமும் பொய் பேசுவதையே தொழிலாகக்கொண்டிருக்கிறார்.

ஆளுநர் ரவி

எனவே, இந்த நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் ஆளுநர் செயல்படுகிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது. நீங்கள் வேண்டுமானால் தேர்தலில் நின்று வெற்றிபெற்று வந்த பிறகு உங்கள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கருத்துகளைப் பேசுங்கள். ஆனால், அதற்கெல்லாம் உங்களுக்குத் தைரியமில்லை. எனவே, சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பதால் நாளை நடைபெறவிருக்கின்ற பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்வதாக இல்லை. வேந்தர் என்ற பதவியைப் பயன்படுத்திக்கொண்டு எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். எனவேதான், வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.