மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், `நான் பேசியது தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது’ எனக் கூறி, மன்னிப்பு கேட்டுக்கொண்டார் நிதிஷ். இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றபோது, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அமெரிக்கப் பாடகியும், நடிகையுமான மேரி மில்பென், இந்தியாவின் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைக் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “பீகார் முதல்வரின் பேச்சால் இன்று, இந்தியா ஒரு சவாலான தருணத்தை எதிர்கொள்கிறது, அங்குப் பெண்களின் மதிப்பு குறிவைக்கப்படுகிறது. இந்தச் சவாலுக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே இருப்பதாக நான் நம்புகிறேன். முதல்வர் நிதிஷ் குமாரின் கருத்துக்குப் பதிலளிக்கும் தைரியமான பெண் ஒருவரை பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஒருவேளை நான் இந்தியக் குடிமகளாக இருந்திருந்தால், பீகாருக்குச் சென்று முதலமைச்சராகப் போட்டியிடுவேன்.
2024 தேர்தல் களத்திலும் இந்தியாவை வழிநடத்தப் பிரதமர் மோடிதான் பொறுத்தமானவர். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அவரது முயற்சிகள் வரவேற்கத்தக்கது” எனக் குறிப்பிட்டார். பாடகி மேரி மில்பென் பதிவுக்குப் பதிலளித்த சிவசேனா தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா சதுர்வேதி, தனது எக்ஸ் பக்கத்தில்,“மேரி மில்பெனிடம் மணிப்பூர் பற்றி என்ன கருத்து இருக்கிறது… ஆனால், பீகார் முதல்வர் குறித்து மேரி மில்பென் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேரி மில்பென் 2024-ல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தையும் சேர்த்து பிரசாரமாக்குகிறார். எனவே, அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விட்டுவிட்டு இந்தியக் குடியுரிமையைப் பெற வேண்டும். அதன் மூலம் பிரதமர் மோடியின் உண்மையான ஆட்சியை அனுபவிக்க வேண்டும். அதுவரை தயவு செய்து அமைதியாக உட்காருங்கள்” எனக் கிண்டலாகப் பதிவிட்டிருக்கிறார்.