சட்டமன்ற இருக்கை விவகாரம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க ஹை கோர்ட் உத்தரவு!

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சட்டமன்றச் செயலாளர், சபாநாயகர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், `2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 66 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அ.தி.மு.க உள்ளது. 2021-ம் ஆண்டு மே மாதம் நடந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

எடப்பாடி – ஓ.பி.எஸ்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எதிர்க்கட்சி கொறடாவாகவும், எஸ்.ரவி துணை கொறடாவாகவும் தேர்ந்தெடுக்கபட்டனர். சட்டமன்றக் கட்சியின் செயலாளராக அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்ந்தெடுக்கபட்டனர். 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் நீக்கப்பட்டனர். அதையடுத்து 2022-ம் ஆண்டு ஜூலை 17-ல் கட்சியின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், சட்டமன்றக் கட்சியின் துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ண்மூர்த்தியும் நியமிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டுமென்று சபாநாயகருக்குக் கடிதம் எழுதினோம்.

அதோடு மட்டுமல்லாமல் ஐந்து முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பினோம். ஆனால், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, சபாநாயகர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், சட்டமன்றத்தில் தொடர்ந்து அ.தி.மு.க-வினருடன் இருப்பதால், எதிர்க்கட்சியினர் விவாதங்களில் தலையிடுவதால், அ.தி.மு.க-வினரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. எனவே, கட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும் சட்டமன்றச் செயலருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றி ஒதுக்கீடு செய்வதற்கும் சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி – சபாநாயகர் அப்பாவு

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கி அங்கீகரிக்கக் கோரி, 20 முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை” என வாதிட்டார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அவரின் வாதத்தைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு சட்டமன்றச் செயலாளர், சபாநாயகர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.