சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள கோயில் வாசலில் திடீரென வெடிச் சத்தம் கேட்டது. உடனடியாக கோயில் பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கோயிலுக்கு வெளியில் வந்து பார்த்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக கொத்தவால்சாவடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, கோயிலுக்கு வந்த ஒருவர் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. அவர் யார்… எதற்காக வீசினார் என்று போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “பெட்ரோல் குண்டை வீசியவர் கோயில் அருகே கடை நடத்தி வரும் முரளி கிருஷ்ணா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப்பிடித்து விசாரித்தபோது, `கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வருகிறேன். ஆனால் சாமி எனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த விரக்தியில்தான் கோயிலில் பெட்ரோல் குண்டை வீசினேன்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகிறோம். சம்பவத்தின்போது முரளி கிருஷ்ணா போதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர்மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.