சீனிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாக  வர்த்தக நிலையங்களை  சுற்றிவலைக்க    நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி கட்டுப்பாட்டு விலை தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை  சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

 

அரசாங்கத்தின் நவம்பர் மூன்றாம் திகதிய அதி விசேஷமான வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, 2003 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டம்  (திருத்தியமைக்கப்பட்டது) 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ் சீனிக்கான ஆகக்கூடிய கட்டுப்பாட்டு விலையை விதித்து அதற்கிணங்க சீனி வியாபாரத்தில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளது.

 

அதன்படி, சீனி ஒரு  கிலோகிராம்  ஆகக் கூடுதலான சில்லறை விலையாக வெள்ளை சீனி  பொதிசெய்யப்படாத நிலையில் 275.00 ரூபாவிற்கும்,  பழுப்பு அல்லது சிவப்பு சீனி 330.00 ரூபாவிற்கும்    விற்பனை செய்யப்பட வேண்டும்.

 

அதேவேளை பொதிசெய்யப்பட்ட நிலையில் வெள்ளை சீனி 330.00 ரூபாவிற்கும்,   பழுப்பு அல்லது சிவப்பு சீனி 330.00 ரூபாவிற்கும்    விற்கப்பட வேண்டும்.

 

 குறித்த ஆகக்கூடிய சில்லறை விலைக்கு அதிகமாக சீனி இறக்குமதியாளர், உற்பத்தியாளர்,விநியோகத்தர், வழங்குநர் அல்லது வியாபாரி எவரும் விற்பனை செய்யவோ,  வழங்கவோ,  விற்பனைக்கு விடவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த 7ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது 12 வியாபார நிலையங்களுக்கான திடீர் பரிசோதனையை மேற்கொண்டனர்.  அதில் 6 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

அவற்றில் தலா 2 வியாபாரிகள் சீனியை அதிகரித்த விலையில் விற்றகாகவும்,  சீனியின் விலையை காட்சிப்படுத்தவில்லை என்றும், கீறி சம்பா அரிசியை  அதிக விலையில் விற்றமைக்காகவும் இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அலுவலகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.