ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி..! இனி 20 ஓவர் கேப்டன் பதவியும் கிடையாது

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் நவம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது.  இதில் காயமடைந்த T20I கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க வாய்ப்பில்லை. அவருக்கு இடது கணுக்கால் தசைநார் கிழிந்து சிகிச்சையில் இருக்கிறார். இதில் இருந்து மீள அதிக நேரம் தேவைப்படும். அதனால் உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அறிவிக்கப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு டி20 தொடருக்கான இந்திய அணியில் புதிய கேப்டன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.  இந்தியாவின் உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பிறகுதான் அறிவிக்கப்படும், இது நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் நடைபெறும்.

இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, தென்னாப்பிரிக்கா தொடருக்கு தான் அவர் தகுதி பெற வாய்ப்புள்ளது. அதற்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்திருப்பதால் இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்பது பிசிசிஐ ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. அவர் இல்லாதபட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்படுவார். 

அடுத்த ஆண்டு ஜூன் ஜூலை மாதங்களில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் அந்த தொடரில் பங்கேற்க கூடிய 25 வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுழற்சி முறையில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கவும் இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதனுடைய முதல்படி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விளையாட இளம் வீரர்களுக்கான வாய்ப்பு கொடுப்பது. 

அதேபோல் இந்த தொடருக்கு அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் போன்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது சிறப்பாக செயல்பட்டவர்களைத் தவிர, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல் போன்றவர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்சர் படேல் தொடை காயத்தில் இருந்து குணமடைந்தால், அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். மேலும், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

சையது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக விளையாடிய புவனேஷ்வர் குமார், ரியான் பராக் மற்றும் அபிஷேக் ஆகியோரும் இந்திய அணிக்கான தேர்வில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இடம் கிடைக்குமா? என்பது இப்போதைக்கு மதில்மேல் பூனையாக இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.