4 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் படம் தியேட்டர்களில் ரிலீஸ்

2020ம் ஆண்டு கொரானோ தாக்கம் வந்த போது தியேட்டர்கள் ஓரிரு மாதங்கள் மூடப்பட்டன. அதனால் அப்போது தியேட்டர்களில் படங்கள் வெளியாக முடியவில்லை. அந்த சமயத்தில் ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிடும் முறை ஆரம்பமானது.

2020ம் ஆண்டு சுமார் 24 படங்கள் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகின. 2021ம் ஆண்டு 42 படங்களும், 2022ம் ஆண்டு 27 படங்களும் அப்படி வெளியாகின. இந்த ஆண்டுதான் அந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கி தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படம் 2021ம் ஆண்டிலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி விக்ரம், துருவ் விக்ரம் நடித்த 'மகான்' படம் 2022ம் ஆண்டிலும் ஓடிடி தளங்களில் வெளியாகின. அதற்கு முன்பு கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'பேட்ட' படம் 2019ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. ஆக, நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் நாளை தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

தனது இயக்கத்தில் வெளிவந்த 'ஜகமே தந்திரம், மகான்' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால், அவரது தயாரிப்பில் வெளிவந்த 'பெண்குயின், பூமிகா' ஆகிய படங்களை அவரே ஓடிடி தளங்களில் தான் வெளியிட்டார். கார்த்திக் சுப்பராஜுக்கு அவரது படங்கள் ஓடிடியில் வெளியான போது என்ன வருத்தம் இருந்ததோ அதே வருத்தம்தானே 'பெண்குயின், பூமிகா' படங்களின் இயக்குனர்களுக்கும் இருந்திருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.