Bigg Boss 7 Day 38: ` பூர்ணிமா வெளியேறுகிறாரா?' பிக் பாஸ் ஆடிய ‘செக் மேட்’ ஆட்டம்!

இந்த வார எவிக்ஷனில் பூர்ணிமா வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. 

அந்தச் சம்பவம் நடந்தால், அது மாயாவிற்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே ஐஷூவும் நிக்சனும் விசித்ராவிடம் சரண் அடைந்திருக்கும் சூழலில் பூர்ணிமாவும் வெளியேறுவது மாயா கூட்டணி சுக்கு நூறாக உடைவதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நான் வளர்கிறேனே மம்மி’ –  நாளுக்கு நாள் பிரமிப்பூட்டும் அர்ச்சனா

“இந்த சான்ஸை கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கணும்-ன்னு ஒரு போர்டு வந்துடுச்சு பார்த்தீங்களா.. சுரேஷ் அண்ணா கிட்ட சொல்லணும்.. அவங்களுக்கு உங்க பிரச்சினை பெரிசில்ல. வேற ஒண்ணு பிளான் பண்ணிட்டாங்கன்னு” என்று விசித்ராவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ஆம், மாயா சொன்ன அந்த ஸ்டேட்மெண்டின் தொனியைப் பார்த்தால் சுரேஷின் விவகாரத்தை ‘லுலுவாய்க்கு’ மேலே நிறுத்தி அதன் கீழ் ரகசியமான வெடிகுண்டுகளை புதைத்து வைக்க மாயா குழு முடிவு செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

தன்னை காற்றாட அழைத்துச் சென்றது தொடர்பாக பூர்ணிமா மீது அர்ச்சனாவிற்கு ‘சாப்ட் கார்னர்’ இருக்கிறதோ, என்னமோ “அவங்க கேப்டனோ இருந்த போது எல்லாம் சரியாப் பண்ணாங்க.. இப்பத்தான் ஒவ்வொண்ணுக்கும் கெஞ்ச வேண்டியிருக்கு” என்று விஷ்ணுவிடம் அர்ச்சனா சலித்துக் கொண்டார். பூர்ணிமாவை விஷ்ணுவிற்கு (இப்போது) பிடிக்காது. எனவே ‘இது பூர்ணிமாவோட உத்தியா கூட இருக்கலாம். அவங்க இருந்த போது சரியாப் பண்ணிட்டு மாயா கேப்டன்சிக்கு கெட்ட பெயர் வாங்கித் தர்ற பிளானா இருக்கலாம்” என்று வண்டியை எப்படியாவது ஓட்டி பூர்ணிமாவின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்த விரும்புகிறார் விஷ்ணு.

“இந்த கேரக்ட்டர் இல்லாம அந்தக் கேரக்ட்டர் இருக்காது. ஆனா அது இல்லாம இது இருக்கும்” என்று மாயா, பூர்ணிமா குறித்து சொல்லிக் கொண்டிருந்தார், அர்ச்சனா. இதே விஷயத்தை நேற்று மாயாவும் அக்ஷயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது நினைவில் இருக்கலாம். (‘பூர்ணிமாவை காலி பண்ணா, என்னை காலி பண்ணிடலாம். இதான் டிப்ஸ்’) எனில் அர்ச்சனாவின் அப்சர்வேஷன் பவர் கூர்மையாக இருக்கிறது என்று பொருள். ஒருவேளை இந்த வாரம் பூர்ணிமா எலிமினேட் ஆனால் மாயாவின் முக்கால் பலம் போய் விடும் என்று தெரிகிறது.

சொதப்பலாக ஆரம்பித்திருக்கும் வழக்காடு மன்றம்

வினுஷா விவகாரம் பொதுவில் வந்திருப்பதால் குற்றவுணர்வும் அச்சமும் அடைந்திருக்கும் நிக்சன், அதை சரியாகத் தட்டிக் கேட்ட விசித்ராவிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறார். இதன் மூலம் இந்த விஷயத்தை விசித்ரா மேலும் நோண்டாமல் இருக்கலாம் என்பது அவரது நோக்கமாக இருக்கலாம். ‘ஒரு எலிமினேஷனுக்குப் போய் இப்படி பயப்படறான்.. அங்க போய் செட்டில் ஆயிட்டான். நான் வெச்சிருந்த நம்பிக்கையை உடைச்சிட்டான்’ என்பது போல் பூர்ணிமாவிடம் நிக்சனைப் பற்றி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருந்தார் மாயா. தன்னுடைய கேங்கில் ஒரு நபர் வெளியே சென்று விட்ட பதட்டம் இது. ஐஷூ, விசித்ராவுடன் இணைந்த விஷயமும் மாயாவை கவலை கொள்ளச் செய்திருக்கும்.  (என்னய்யா!.. நம்மாளுங்க எதிர்க்கட்சிக்கு தாவிக்கிட்டே இருக்காங்க?!)

BB Court  என்கிற வழக்கமான டாஸ்க்கை தூசு தட்டி ஆரம்பித்தார் பிக் பாஸ். யார் மீது வழக்கு என்று சொல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரே அவருக்காக வாதாடலாம். இதில் சிறப்பாக வாதாடுபவருக்கும் நீதிபதிக்கும் ஸ்டார் பரிசு உண்டு.

முதல் வழக்கை தொடுத்தவர் விஷ்ணு. தொடுத்தது பூர்ணிமா மீது. இதன் மூலம் அவர் இரண்டு விஷயங்களை அம்பலப்படுத்த முயன்றார். ஒன்று, பெண்ணுக்கு எதிரான சொல்லப்பட்ட ஒரு பாலியல் கிண்டலுக்கு மாயா ரசித்து சிரித்தார். இவர்கள் எப்படி ‘பெண் பாதுகாப்பு’ குறித்து கேள்வி எழுப்ப முடியும்? இரண்டு, மாயா – பூர்ணிமா கூட்டணிக்குள் கலகத்தை ஏற்படுத்தி அதை  உடைப்பது. அவர்களுக்குள் இருப்பது காவிய நட்பெல்லாம் இல்லை. ஒருவருக்கொருவர் ஆதாயம் கருதியே பழகுகிறார்கள் என்பது.

வழக்கு எண் 1: விஷ்ணு Vs பூர்ணிமா

ஆனால் இந்த வழக்கின் திசை தெளிவாகப் பயணிக்கவில்லை. விஷ்ணு தன் தரப்பை அழுத்தமாக ஆரம்பித்தாலும் இறுதியில் சொதப்பி விட்டார். (உன் கிட்ட ஸ்டார்ட்டிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா!) கூத்தில் கோமாளி போல, கான்வென்ட் பேபி ரவீனாதான் இதற்கு நீதிபதி. பிக் பாஸ் சற்று அதட்டியவுடன் தீர்ப்பை தலைகீழாக மாற்றிச் சொல்லி விட்டார். தங்களின் தரப்பை பூர்ணிமாவும் மாயாவும் திறமையாக எடுத்து வைத்தாலும் இந்தக் குழப்பம் காரணமாக தோல்வியடைந்து விட்டார்கள்.

‘மாயா மற்றும் பூர்ணிமாவின் முன்னிலையில் பூர்ணிமாவின் உடல் பாகம் குறித்த ஒரு பாலியல் கிண்டலை பிரதீப் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டு பூர்ணிமா அதிர்ச்சியடைந்து மௌனமாகி நின்று விட்டு, பிறகு ‘மாயா இதைக் கேட்க மாட்டீங்களா?’ என்று கேட்க “அண்ணா.. இப்படில்லாம் பேசாதீங்க’ என்று கோபமின்றி இயல்பாக பிரதீப்பிடம் சொல்லியிருக்கிறார் மாயா. (இதை சிரித்துக் கொண்டே மாயா சொன்னதாக பூர்ணிமாவின் வழியாக விஷ்ணு அறிந்து கொண்டாராம்!).

‘நான் அந்த தொனியில் விஷ்ணுவிடம் சொல்லவில்லை’ என்று பூர்ணிமா விளக்கம் தர, மாயாவும் வந்து சாட்சி சொல்ல ஒரு வழியாக பூர்ணிமாவிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தார் ரவீனா. வாதப், பிரதிவாதங்களின் படி இதுதான் சரியான தீர்ப்பு. ‘மாயா சிரித்துக் கொண்டே சொன்னார்’ என்று பூர்ணிமா சொன்னதாக விஷ்ணு குற்றம் சாட்டுவது அவ்வாறு நடக்கவில்லை என்பது நிரூபணமாகி விட்டது. விஷ்ணுவும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார். ‘ஓகே.. எனக்குத் தெளிவாகி விட்டது. அதைத்தான் நான் ‘விவாதிக்க’ விரும்பினேன்’ என்று  விஷ்ணு சொன்னதில் இருந்து ஒரு வார்த்தையை சரியாகப் பிடித்துக் கொண்டார் பிக் பாஸ்.

திட்டமிட்டு தீர்ப்பை மாற்றினாரா பிக் பாஸ்?

எனவே அவர் குறுக்கிட்டு  “ஒரு வழக்கை விசாரிப்பதற்கு சில அடிப்படையான இலக்கணங்கள் உண்டு. இது விவாதிப்பதற்கான பட்டி மன்றம் அல்ல. வழக்காடு மன்றம்’ என்று சொல்லவே வழக்கு மறுபடியும் துவங்கியது. தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கு, அடுத்த நிமிடமே அப்பீல் செய்யப்பட்டு அதே நீதிமன்றத்தில், அதே நீதிபதியால் விசாரிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாக இருக்கும். பிக் பாஸ் குறுக்கிட்டு எச்சரித்ததால் ஒருவேளை தன் தீர்ப்பு தவறோ என்று ரவீனா குழம்பியிருக்க வேண்டும். எனவே ‘நீங்க மாயாவைப் பத்தி குறை சொன்னீங்கள்ல.. அதுதான் விஷ்ணுவோட வழக்கு. அது நிரூபணமாயிடுச்சு. விஷ்ணு வெற்றி” என்று பிளேட்டை மாற்றிப் போட ‘நம் ராஜதந்திரங்கள் அனைத்து வீணாகி விட்டதே’ என்று இடிந்து அமர்ந்தார் பூர்ணிமா.

எதிர்பாராமல் கிடைத்த இந்த வெற்றியை கைத்தட்டி கொண்டாடிய விஷ்ணு “அதை எக்ஸ்போஸ் பண்ணனும்னுதான் இப்படிக்கா ரூட் பிடிச்சு வந்தேன்” என்று தினேஷிடம் வெளியே பெருமையாக சொல்லிக் கொண்டது ஒரு நல்ல காமெடி. தனது தரப்பை தொடர்ந்து அழுத்தமாக கொண்டு சென்றிருந்தால் விஷ்ணுவின் இந்த வெற்றியைப் பாராட்டியிருக்கலாம்.

தீர்ப்பு சொல்லி முடிக்கப்பட்ட பிறகு அதில் பிக் பாஸ் குறுக்கிட்டதால், தான் ஆட்டத்தில் நீடிப்பது  பிக் பாஸ் டீமிற்கு பிடிக்கவில்லையோ என்று சஞ்சலம் கொள்கிற பூர்ணிமா ‘இதுதான் ஸ்கிரிப்ட்டுன்னு சொல்லியிருக்கலாமே..மூளை இல்லாத.. ” என்று ஆதங்கப்பட “பார்த்துப் பேசு” என்று அவரைத் தடுக்கிற மாயா “இது நம்மள பிரிக்கறதுக்கான சதி.. பார்த்துக்கலாம் விடு” என்று ஆறுதல் படுத்துகிறார்.

வழக்கு எண்: 2  பூர்ணிமா Vs விசித்ரா

அடுத்த வழக்கை விசித்ரா மீது தொடுக்க முனைகிறார் பூர்ணிமா. மளிகைப் பொருட்களை எடுக்க அர்ச்சனாவை அனுப்பிய விவகாரம். இது விசித்ராவால் பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்பட்ட விஷயம் என்பது பூர்ணிமாவின் புகார். ‘என்ன தீர்ப்பு வரணும்னு விரும்பறீங்க?’ என்று ஆரம்பித்த பிக் பாஸ், சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டு ‘எதை நிரூபிக்கணும்னு விரும்பறீங்க?” என்று வாக்கியத்தை மாற்றிக் கொண்டார். (பிக் பாஸிற்கே டங் ஸ்லிப் ஆன மோமெண்ட்!).

விஷ்ணுவிடமும் இப்படி கேட்கப்பட்டிருக்குமோ என்று சந்தேகம் கொள்கிற பூர்ணிமா “விஷ்ணு கிட்ட இப்படி கேட்டீங்களா?” என்று உடனே கேட்டது புத்திசாலித்தனம். என்னதான் மாயாவுடன் இணைந்து கெட்டுப் போனாலும் அடிப்படையில் பூர்ணிமா கூர்மையான அறிவுள்ளவர் என்பதை பல சமயங்களில் நிரூபிக்கிறார். ‘உங்க வழக்கை பத்தி மட்டும் பேசுங்க’ என்பது மாதிரி அவரை துரத்தி வெளியே அனுப்புகிறார் பிக் பாஸ்.

வழக்கு துவங்கியது. பூர்ணிமா வைத்த குற்றச்சாட்டை மிக அநாயசமாக எதிர்கொண்டார் விசித்ரா. மேலும் சாட்சியங்களும் அவருக்கு சார்பாக வலுவாக இருந்தன. ‘வாக்கெடுப்பின் மூலம்தான் அர்ச்சனா அனுப்பப்பட்டார்’ என்பதை சின்ன வீட்டார் வரிசையாக வந்து சாட்சி சொன்னார்கள். ‘மணிதான் மைண்ட்ல இருந்தார். ஆனா அர்ச்சனாவிற்கு போட்டேன். அவங்களுக்கும் ரிலாக்ஸ் வேணுமில்ல?!’ என்று சுரேஷ் மட்டும் சற்று சொதப்பினார்.

‘அங்க போய் கத்துக்கட்டும்ன்ற காரணத்தைச் சொல்லித்தான் அர்ச்சனாவை சின்ன வீட்டுக்கு மாயா அனுப்பிச்சாங்க. அதனாலதான் அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்தேன்’ என்று தினேஷ் சொன்ன சாட்சியம் சரியாக இருந்தது. பல சமயங்களில் சரியான பாயிண்ட்டை எடுத்து தெளிவாகப் பேசுகிறார் தினேஷ்.

“அர்ச்சனாவிற்கு சமையல் தெரியாது -ன்றது அவங்க பிரச்சினையா, அர்ச்சனாவை அனுப்பியதுதான் பிரச்சினையா? எங்களுக்குள்ள கலந்து பேசி தேர்ந்தெடுத்துதான் அர்ச்சனாவை அனுப்பினோம். உணவு விஷயத்துல எல்லாம் நாங்க விளையாட மாட்டோம்” என்று விசித்ரா தெளிவாகப் பேசினாலும் ஒரு கட்டத்தில் நீதிபதி நிக்சன் ‘ஆர்டர்.. ஆர்டர்’’ என்று தடுத்தாலும் அவரை  பின்னால் தள்ளி விட்டு பூர்ணிமாவும் விசித்ராவும் வார்த்தைகளால் மோதிக் கொண்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

நிக்சன் சொன்ன தீர்ப்பு சரியா, தவறா?

‘சாட்சியங்களின் அடிப்படையில் பார்த்தால் விசித்ரா பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படவில்லை. வாக்கெடுப்பின் மூலம்தான் அர்ச்சனா அனுப்பப்பட்டார் என்பது தெளிவாகிறது. எனவே விசித்ரா குற்றவாளியில்லை” என்பது நிக்சனின் தீர்ப்பு. இது ஒருவகையில் சரி என்றாலும் ஒரு முக்கியமான சாட்சியத்தை நீதிபதி கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி விட்டார். ‘குளிச்சுட்டு இருந்த என் கிட்ட மெதுவா வா’ன்னு விசித்ரா சொன்னாங்க’ என்று அர்ச்சனா சொன்னதை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ‘நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்’ என்று இதை பூர்ணிமா அடிக்கோடிட்டு நீதிபதியிடம் சொன்னாலும் நிக்சன் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஒரு பிழை.

விசித்ரா ஏன் இந்த கேமை ஆடினார் என்பதைப் புரிந்து கொள்ள சற்று பின்னோக்கி பிளாஷ்பேக்கில் செல்ல வேண்டும். இது மாயா குழுவிற்கு எதிராக விசித்ரா எடுத்த ரியாக்ஷன் பிளான். ஒரு முறை டாஸ்க்கிற்கு வர விசித்ராவிற்கு தாமதமாகி விட்டது. ஒப்பனையை முடித்து விட்டு சாவகாசமாக வந்தார். அதை மாயா ஆட்சேபித்த போது ‘பூர்ணிமா வரும் வரையெல்லாம் நீங்கள் முன்பு காத்திருக்கவில்லையா?’ என்று பதில் ஆட்சேபத்தை எழுப்பினார்  விசித்ரா. அப்போது மாயாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே மோதல் நடந்தது. அதற்கு எதிர்வினையாகத்தான் ‘டாஸ்க் லெட்டர் படிக்கறாங்க. நீ மெதுவா வா” என்று குளியல்அறையில் இருந்த அர்ச்சனாவிடம் விசித்ரா சொல்லியிருக்க வேண்டும்.

‘மாயா குழு தனக்கு எதிராக பல விஷயங்களைச் செய்கிறார்கள், எனவே அதற்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்று விசித்ரா நினைப்பதிலும் அதற்காக பல உத்திகளை கையாள்வதிலும் முழு நியாயம் உள்ளது. இந்த ஆட்டமே அதற்குத்தான். ஆனால் உணவுப்பொருள் விஷயத்தில் அவர் ஆட முயன்றதுதான் தவறு. எனவே ‘பழிவாங்கும் நோக்கத்தோடு’ விசித்ரா செயல்பட்டார் என்பது அர்ச்சனாவின் சாட்சியம் மூலம் உறுதியானது. இதை சின்ன வீட்டில் இருந்த பிராவோவே பிறகு நிக்சனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

நிக்சன் இப்போது விசித்ராவின் பக்கம் சாய்ந்திருப்பதால் தீர்ப்பை மாற்றிச் சொல்லியிருக்கலாமோ, என்னமோ!. ஏனெனில் அர்ச்சனாவை ஷாப்பிங் அனுப்பியது தொடர்பாக ‘உங்க மேல இருந்த மரியாதையே போயிடுச்சு மம்மி’ என்று அந்தச் சமயத்தில் ஆவேசமாக சொன்னவரே நிக்சன்தான். ‘நீ சொன்ன தீர்ப்பு ரொம்பச் சரியானது’ என்று நிக்சனை விஷ்ணு பாராட்டிக் கொண்டிருந்தார். பூர்ணிமாவின் மூக்கு உடைபடும் எந்தவொரு விஷயமும் விஷ்ணுவிற்கு கொண்டாட்டம்தான். எனவே இந்த வழக்கிலும் பூர்ணிமாவிற்கு தோல்வி கிடைத்தது. இது தொடர்பாக பிறகு நிக்சனிடம் அவர் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

ஷாப்பிங் பில்லை வைத்து பிக் பாஸ் ஆடிய ‘செக் மேட்’ ஆட்டம்

அடுத்த விஷயத்திலும் பெரிய வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஷாப்பிங் பில்லை மறைத்து வைத்து இவர்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள் அல்லவா? அதை வைத்தே டாஸ்க்கை ஏற்படுத்தி தான் ஒரு ராஜதந்திரி என்பதை நிரூபித்தார் பிக் பாஸ். எனில் மளிகை பில்கள் வெளியே எடுக்கப்பட்டாக வேண்டும். தனது தரப்பில் குற்றம் இருக்கிறது என்பதற்காகத்தான் பெரிய வீடு அதை மறைத்து வைத்தது. சின்ன வீட்டார் கேட்ட போதும் தராமல் மறுத்து கள்ள ஆட்டம் ஆடினார்கள். இப்போது இதை அம்பலத்திற்கு கொண்டு வந்தார் பிக் பாஸ். இந்த முடிவை சின்ன வீட்டார் உற்சாகமாக கொண்டாடியது நியாயம். அவர்களுக்கான நீதி கிடைத்த நேரம் இது.

ஷாப்பிங் பில்லை வைத்து ஒரு டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஷாப்பிங் சென்ற அர்ச்சனாவும் மாயாவும் இணைந்து கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். இதில் பெரிய வீடு தோற்றதால் ஒருவர் சிறைக்குச் செல்ல வேண்டும். ‘கேப்டன் ஜெயிலுக்குப் போகலாமா?’ என்று அப்போதே கேட்டுக் கொண்டார் மாயா. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது இதன் பொருள். மாயா நேர்மையானவர் என்றால் கேப்டன் என்கிற முறையில் நடந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு தன்னையே நாமினேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதற்கான வாக்கெடுப்பில் விஷ்ணுவின் பெயரைச் சொல்லி வாக்கெடுப்பை ஆரம்பித்தார் மாயா. இதுவொரு சூசுகமான குறிப்பு. முன்னால் செல்லும் ஆடு எந்த திசையில் செல்லுமோ, மந்தை ஆடுகளும் அப்படியே பின்தொடரும். எனவே மாயாவின் குறிப்பைப் பின்பற்றி பலரும் விஷ்ணுவின் பெயரைச் சொன்னது அநியாயம். பிள்ளைப்பூச்சியான பிராவோவின் பெயரைக் கூட சொன்னார்கள். ‘நல்லா ஜால்ரா தட்றாங்க. எப்பத்தான் திருந்துவாங்களோ?!’ என்று சின்ன வீட்டிலிருந்து பார்த்தபடி இந்தச் செயலை எரிச்சலுடன் கண்டித்தார் விசித்ரா.

சிறைக்குச் சென்ற விஷ்ணு

‘வீட்டில் இத்தனை ரணகளம் நடந்து கொண்டிருந்தும் விஷ்ணு ஒரு பார்வையாளர் போல அமைதியாகவே சுற்றிக் கொண்டு இருந்தார்’ என்பது மாயாவும்  ஜோவிகாவும் சொன்ன குற்றச்சாட்டு. ‘உங்க சைடு நியாயமே இல்லை. நான் எப்படி பேச முடியும்?” என்று விஷ்ணு இதை மறுக்க, ‘நீங்க யார் பக்கம் வேணும்னாலும் பேசியிருக்கலாம். எங்க பக்கம் பேசியிருக்கணும்ன்னு நான் சொல்லவேயில்ல’ என்று ஜோவிகா சொன்னதை தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் விஷ்ணு. ஆனால் ஜோவிகாவின் உடல்மொழி விஷ்ணுவிற்கு எரிச்சலையூட்டியதால் அவரும் பதிலுக்கு ‘கொளந்த.. டம்மி பீஸூ.. ஒரமா போ” என்றெல்லாம் சொல்ல மனம் புண்பட்டு ஜோவிகா கண்கலங்கினார். மரியாதை கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதுதான் இதிலுள்ள நீதி.

பிரதீப் சென்றதில் இருந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும் சுரேஷ், ‘பில் மறைக்கப்பட்ட விஷயம்’ தொடர்பாக உரத்த குரலில் தன் ஆட்சேபத்தை பதிவு செய்தது சரியான விஷயம். வழக்கமாக சுரேஷ் ஹைடெசிபலில் கத்தினால் எரிச்சல்தான் வரும். ஆனால் இந்தச் சமயத்தில் அந்தச் சத்தம் அவசியமாக இருந்தது. ஏனென்றால் அதில் உண்மையான கோபமும் அறச்சீற்றமும் இருந்தது. ‘பில்லை ஏன் ஒளிச்சு வெச்சீங்க?’ என்று சுரேஷ் கோபமாகக் கேட்க “பில்லை ஒளிச்சு வெச்சதுதான் இந்த டாஸ்க்கே’ என்று பூர்ணிமா அளித்த பதிலை எவ்வாறு புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. சில பத்திகளுக்கு முன்புதான் பூர்ணிமா புத்திசாலி என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அத்தனை மொண்ணைத்தனமான பதில் இது.

ஜெயிலுக்குப் போகும் வாக்கெடுப்பு தொடர்பாக அக்ஷயாவை விசித்ரா கண்டித்தது சரியானது. ‘நல்லா ஜால்ரா தட்றீங்க. உன் மேல ரொம்ப எதிர்பார்ப்பு இருந்தது. எல்லாமே போச்சு.. உங்களுக்கெல்லாம் மூளையே வேலை செய்யலை. க்ரூப்ல டூப்பா இருக்கீங்க’ என்று அவர் வன்மையாக கண்டித்தது நியாயம். அக்ஷயா மட்டுமல்ல, பிராவோ, விக்ரம், கானா பாலா போன்றவர்கள், அங்கு பார்வையாளர்கள் போல உலவிக் கொண்டிருப்பதும் கேப்டன் மாயா சொல்வதை அப்படியே பின்பற்றுவதும் அவர்களை பலவீனமான போட்டியாளர்களாகக் காட்டுகிறது.

அழுது கொண்டிருந்த ஜோவிகாவிற்கு பூர்ணிமா ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். ‘சுயபுத்தி இல்லாதவர்ன்னு விஷ்ணு உன்னைச் சொன்னப்ப கமல் சாரே ‘உங்க புரிதல் சரியில்லைன்னு விஷ்ணு கிட்ட சொன்னார்.

விஷ்ணுவிற்கு இங்லீஷ் தெரியாது. மூளை கிடையாது. பாயிண்ட்டே இல்லாம எதையாவது பேசிட்டு இருப்பார்” என்று விஷ்ணுவை பங்கம் செய்து நிறைய பாயிண்டுகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் பூர்ணிமா.

‘ஹப்பாடா! உங்க மூஞ்சிகளையெல்லாம் ரெண்டு நாளைக்கு பார்க்க வேணாம்’ என்று ஜாலியாக சிறைக்கதவை சாத்திக் கொண்டார் விஷ்ணு. பிக் பாஸ் நமக்கும் கூட இந்த வாய்ப்பைத் தரலாம். இரண்டு நாட்களுக்கு இந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்தால் விஷ்ணு சொன்ன அதே டயலாக்கை சொல்லி நாமும் சற்று இளைப்பாறிக் கொள்ளலாம். இந்த வாரம் அப்படியொரு மூச்சுத் திணற வைக்கும் கடுமையான வாரமாக இருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.