டிச.2, 3 தேதிகளில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இது குறித்து தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும்.

தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று அந்தமான் கடற்பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் 1 ஆம் தேதி 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும், 2 ஆம் தேதி 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.