வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம் என ஐ.நா. பொதுச்சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ருசிரா கம்போஜ் பேசியதாவது: இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்துடன் இருநாட்டு நல்லுறவைப் பேணும். சுகாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் இணைந்திருக்கும். இஸ்ரேல்- காசா பிரச்னைக்கு அமைதியின் வழியில் நிரந்தரத் தீர்வு என்பதே இலக்கு.
இஸ்ரேல்- காசா இடையே மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உரிய நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய இந்தப் போர் நிறுத்தம் உதவும். இந்தியா இதுவரை 70 டன் அளவிலான மனிதாபிமான அடிப்படையிலான நிவாரண உதவிகளை பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ளது.
பிணைக் கைதிகளாக அப்பாவிப் பொதுமக்களைப் பிடித்துச் செல்லுதல் போன்ற செயல்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்த இயலாது. ஹமாஸ் குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதனால் எந்தவித நிபந்தனையுமின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இவ்விவகாரத்தில் பல்வேறு உலகத் தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். பயங்கரவாதத்தை சற்றும் பொறுத்துக் கொள்ளாத கொள்கையுடன் அணுகுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement