நீலகிரி மாவட்டத்ததைச் சேர்ந்த 14 சிறுவன் ஒருவர் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9 – ம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவரின் தந்தை ஐயப்பன் பக்தர் என்பதால் தனது மகனை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல மாலை அணிவித்துள்ளார். மாணவனும் தினமும் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடக்கும் காலை வழிபாடு கூட்டத்திற்கு வழக்கம் போலச் சென்றிருக்கிறார்.
மாணவனின் தலைமுடி அதிகமாக வளர்ந்திப்பதைக் கண்ட பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆத்திரத்தில் மாணவனின் தலைமுடியைக் கத்தரித்திருக்கிறார். இதனால் மனவேதனை அடைந்த மாணவன் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியிருக்கிறார். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தைக் கடைபிடித்து வரும் மகனுக்கு உதவி தலைமையாசிரியர் தலைமுடியை கத்தரித்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மத நம்பிக்கைகளில் தலையிடும் வகையில் அத்துமீறிய ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்திருக்கிறார்கள். பள்ளிக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு அளித்து , பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், ” மாணவன் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்திருப்பது தெரியவில்லை என்றும் தெரியாமல் முடியை கத்தரித்துவிட்டதாக மாணவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றனர்.