புதுடெல்லி: கடந்த 2017 முதல் 2021 வரை சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் (மெயின் எக்ஸாம்) தேர்ச்சி பெற்றவர்களில் 63 சதவீதம் பேர் பொறியியல் பட்டதாரிகள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் சுஷில் குமார் மோடி எழுப்பிய கேள்விக்கு மத்திய பணியாளர் விவகாரத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதில் வருமாறு:
கடந்த 2017 முதல் 2021 வரை சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வில் 4,371 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2,783 பேர் அதாவது 63 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள். 1,033 பேர் அதாவது 23 சதவீதம் பேர் சமூக அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்கள். 315 பேர் அறிவியல் பட்டதாரிகள், 240 பேர் மருத்துவர்கள் ஆவர்.
இந்த 5 ஆண்டுகளில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,371 பேரில் 3,337 பேர் இளநிலை பட்டதாரிகள், 1,034 பேர் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் ஆவர்.
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.