டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர்

மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போலவே விறுவிறுப்பான ஒரு துப்பறியும் திரில்லர் படமாக இது வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இயக்கியிருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வெற்றி படம் என்று முதல் நாளை தெரிந்து விட்டது. ஆனால் இரண்டாம் நாள் ஒரு திரையரங்கிற்கு நாங்கள் படம் பார்க்க சென்றபோது வளர்ந்து வரும் இயக்குனர் ஒருவர் அவரது உதவியாளர் குழுவுடன் கண்ணூர் ஸ்குவாட் படத்தை பார்த்து மோசமாக சத்தமாக கமெண்ட் அடித்தபடி இருந்தனர். அருகில் இருந்த பார்வையாளர்களுக்கும் அது முகம் சுளிக்க வைப்பதாக இருந்தது. இத்தனைக்கும் அவர் இப்போது ஒரு பெரிய பட்ஜெட் படத்தை இயக்கி வருகிறார். இதுபோன்று நல்ல படங்களையும் குறை சொல்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் பெயர் குறிப்பிடாமல் கூறிய அந்த இயக்குனர் தற்போது நடிகர் டொவினோ தாமஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் நடித்து வரும் அஜயண்டே ரெண்டாம் மோசனம் என்கிற வரலாற்றுப் படத்தை இயக்கி வரும் ஜித்தின் லால் என்பவரை தான் குறிக்கிறது என்பதாக நினைத்துக் கொண்டு மம்முட்டி ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அவர் மீது வசைபாட ஆரம்பித்தனர்.

இதனை கவனித்த ரோபி வர்கீஸ் ராஜ், “தயவுசெய்து ரசிகர்கள் நான் குறிப்பிட்ட இயக்குனர் யார் என்கிற பெயருக்கு நீங்களாகவே பெயர் சூட்டும் வேலை வேண்டாம். ஜித்தின் லால் எனது நெருங்கிய நண்பர். என் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு மனதார பாராட்டியவர். ஜித்தின் லாலிடம் கடந்த சில மணி நேரங்கள் அடைந்த மனக்கஷ்டத்திற்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த பெயர் யூக பிரச்சனையை இத்துடன் விட்டு விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட இயக்குனர் ஜித்தின் லாலும் ரோபி வர்கீஸ் ராஜின் இந்த பதிலை வரவேற்றுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.