'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள்

சினிமா என்பது ஹீரோக்களின் பின்னால் மட்டுமே சென்று கொண்டிருக்கும் காலம். 5, 10 கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சில ஹீரோக்கள் இன்று 200 கோடி வரை சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார்கள். ஆனால், அந்த ஹீரோக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தியேட்டர்கள் மிகவும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.

விஜய் நடித்து வந்த 'லியோ' படத்திற்குப் பிறகு தியேட்டர்களுக்கு அதிக அளவில் மக்கள் வரவில்லை என தியேட்டர்காரர்கள் நொந்து போய் பேசுகிறார்கள். இடையில் சில பல நல்ல படங்கள் வந்தாலும் அவற்றைத் தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கூடுதல் செலவு செய்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை. அதன்பிறகு வந்த படங்களில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திற்கு மட்டுமே ஓரளவிற்கு ரசிகர்கள் வந்தார்கள்.

கடந்த இரண்டு வாரங்களாக நிலைமை மிகவும் மோசம் என்கிறார்கள். ஒரு பக்கம் புயல், மழை, வெள்ளம் என வந்ததால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவேயில்லை. பொதுவாக இரவுக் காட்சிகள்தான் மக்கள் வரவில்லை என்றால் ரத்து செய்வார்கள். ஆனால், பகல் காட்சிகளையும் ரத்து செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என கவலைப்படுகிறார்கள். கடந்த வாரம் வெளிவந்த படங்களும், இந்த வாரம் வெளிவந்த படங்களும் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு மட்டுமே ரசிகர்களை வரவழைத்துள்ளதாம்.

இனி வரும் வாரங்களிலும் மக்களை வரவழைக்கும்படியான படங்கள் இல்லை. இதோடு பொங்கலுக்குத்தான் முன்னணி நடிகர்களின் படங்கள் வருகின்றன. அடுத்த ஒரு மாதம் வரையிலும் தியேட்டர்களை நடத்துவது மிகவும் சிரமம் என்பதே இப்போதைய சூழல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.