புவனேஸ்வர் ஒடிசாவில் கடல் ஆமை இனத்தை காக்கும் வகையில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று ஏவுகணை சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில் கடலோரங்கள், பாலைவன பகுதிகளில் ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதுபோன்ற சோதனைகள், ஒடிசா மாநிலத்தை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடற்பரப்பின் அருகே உள்ள வீலர் தீவுப் பகுதிகளில், அழியும் தறுவாயில் உள்ள ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் அதிகளவு வசிக்கின்றன.
இவை, இனப்பெருக்கம் செய்யும் காலமாக, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை கருதப்படுகிறது. ஏவுகணை சோதனையின் போது ஏற்படும் ஒளி, ஒலி மாசு பாதிப்புகளால் கடல் ஆமைகள் உயிரிழக்கும்அபாயம் நிலவுகிறது.
எனவே, இக்காலக்கட்டத்தில் கடல் ஆமை உயிரினங்களை காக்கும் வகையில், ஏவுகணை சோதனைகளை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசு சார்பில் டி.ஆர்.டி.ஓ.,வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மாநில அரசின் கோரிக்கையை பரிசீலித்த பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், ஏவுகணை சோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement