கே.எஸ் ரவிக்குமார் ஒரு கோழை ; முன்னாள் அமைச்சர் காட்டம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படங்களில் படையப்பா திரைப்படம் ஒரு தனித்துவமான மிகப்பெரிய வெற்றி படம். அந்த படத்தில் ஹீரோவுக்கு சமமாக ஹீரோயினுக்கும் வில்லி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, “நீலாம்பரி கதாபாத்திரத்தை எழுதும்போது என் மனதில் தோன்றியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். அவரது நிஜ வாழ்க்கை குணாதிசயங்களை மையப்படுத்தி தான் நீலாம்பரியை உருவாக்கி இருந்தேன். ஜெயலலிதாவிற்கு என ஒரு ஸ்டைலிஷான பாடி லாங்குவேஜ் உண்டு. அதை நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு கொடுத்திருந்தேன்” என்று கூறினார்.

ஆனால் இவரது இந்த பேச்சு அதிமுக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அந்த கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கே.எஸ் ரவிக்குமாரின் இந்த பேச்சை கண்டித்து பேசி உள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இது போன்று ஏன் பேசவில்லை? இப்போது மட்டும் எப்படி தைரியமாக பேசுகிறார்? கே.எஸ். ரவிக்குமார் ஒரு கோழை. இனி இதுபோன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.