நிவாரண பொருட்களை கொள்ளையடிக்கும் ஹமாஸ் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனிடையே, கடந்த மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கி உள்ளது. வான்வழி, தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் மீண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இதற்கிடையே காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருள்களை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுப்பி வருகின்றன. இந்நிலையில், காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்றம்சாட்டி உள்ளது. மேலும், ஹமாஸ் அமைப்பினர் திருடும் வீடியோக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.