ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா கட்சி தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில், பிரபல ராஜ்புத் தலைவர்களில் ஒருவரும், ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னி சேனா கட்சி தலைவருமான சுக்தேவ் சிங் கோகமேடி, ஜெய்ப்பூரில் உள்ள வீட்டில், கடந்த 5ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தேடுதல் வேட்டை
அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் உயிரிழந்தார். அதே சமயம், சுக்தேவ் சிங் கோகமேடியின் பாதுகாவலர்கள் சுட்டதில், துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய ஜெய்ப்பூர் போலீசார், மாநிலம் முழுதும்
தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முக்கிய
குற்றவாளிகளான ரோகித் ரத்தோர், நிதின் பவுஜி உள்ளிட்ட மூன்று பேரை சண்டிகரில்,
புதுடில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில், அவர்கள் ஹிமாசல
பிரதேசத்தில் இருந்து சண்டிகர் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம்
நடத்தப்பட்ட விசாரணையில், சுக்தேவ் கொலை சம்பவத்தில் மூளையாக இருந்து
செயல்பட்டவர் ரோகித் கோதாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் இவர், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கோல்டி பிரார், லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் குழுக்களுடன்நெருக்கமான தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துப்பாக்கி சப்ளை
ராஜபுத்திர அமைப்பின் தலைவரை கொலை செய்வதற்கான ஆட்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை விரேந்திர சரண் என்ற நபரிடம் ரோகித் கோதாரா வழங்கியதும், அவர்
கொலையாளிகளை ஏற்பாடு செய்து, அதற்காக துப்பாக்கி சப்ளை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது இறந்த நபரின் பெயர் நவீன் ஷெகாவத்
என்பதும் தெரியவந்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்