“மாநிலங்களைவை நேர மாற்றத்துக்கு மதச்சாயம் பூசாதீர்கள்” – பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி

புதுடெல்லி: “வெள்ளிக்கிழமைகளில் மதிய உணவுக்கு பின்னர் மாநிலங்களவைத் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதற்கு எந்தவித மதச்சாயமும் பூச வேண்டாம்” என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தர் அப்பாஸ் நக்வி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், “மக்களவையின் அட்டவணைக்கு ஏற்ப வெள்ளிக்கிழமைகளில் மதிய உணவுக்குப் பின்னர் அவைத் தொடங்கும் நேரம் மதியம் 2.30 மணியிலிருந்து 2 மணியாக மாற்றப்படுகிறது” என்று தெரிவித்தார். அன்றைய அவை செயல்பாடுகளில் நேரம் மாற்றப்பட்டிருப்பது குறித்த காரணத்தை அறிய விரும்புவதாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாநிலங்களவைத் தலைவர், மதிய உணவுக்கு பின்பு மக்களவை 2 மணிக்கு தொடங்குவதற்கு ஏற்ப, கடந்த கூட்டத்தில் தான் இவ்வாறு நேரத்தை மாற்றியிருப்பதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, “மதிய உணவுக்கு பின்பு அவை 2.30 மணிக்கு தொடங்கும்போது, முஸ்லிம் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை செய்ய முடியும்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து பாஜக முன்னாள் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டபோது, “இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், சமய சார்பற்ற அதன் முன்னுரையிலும் அரசு மற்றும் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மதத்தின் வழிபாட்டுக்கும் சிறப்புச் சலுகைகளை வழங்கவில்லை. நமாஸ் செய்வதற்கு எந்த தடையும் இல்லை. கூடுதல் மற்றும் சிறப்பு நேரம் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாற்றங்களுக்கு எந்தவிதமான மதச் சாயம் பூசுவதும் தேவையற்றது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.