'வானமே பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் மக்கள் வாழ வழிசெய்ய வேண்டும்!' – ஆவேசமான பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் அரசு பத்து ஆண்டுகளாக ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான அரசை தரவேண்டும் என்ற பெரும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றிப்பாதையில் பயணிக்கிறது. 2004 முதல் 2014 வரை நம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு, ஊழலின் மொத்த வடிவமாக திகழ்ந்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத மக்கள், நல்ல அரசு வரவேண்டும் என மோடியை ஆட்சியில் அமர்த்தினார்கள். 1947-ம் ஆண்டு விடுதலைக்குப் பின்பு நீண்டகாலமாக ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. நேரு தொடங்கி எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் அவர்கள் நாட்டை சுரண்டி பிழைத்துள்ளார்கள்.

பொன் ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் என்றால் ஊழல் என்ற அளவுக்கு தனது அடையாளத்தை வைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினராக 3-வது முறையாக இருந்தவர் வீட்டில் ஐ.டி ரெய்டு நடக்கிறது. அவரது வீட்டில் வருமான வரித்துறை ஒருவாரமாக சோதனை நடத்தியதில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 351 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வந்துள்ளது. அவரிடம் இருந்து 176 பேக்குகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளது. 140 பேக்குகளை எண்ணியதிலேயே இவ்வளவு தொகை கண்டறியப்பட்டுள்ளது. இதுபோக தங்கம், வெள்ளி என கணக்கில் உள்ளது. ஐ.டி, இ.டி வேண்டாம் என்கிறார்கள். இந்த நாட்டை கொள்ளை அடிப்பதற்காக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை விசாரிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்.

அட்டைப்பெட்டியில் கொடுத்தனுப்பப்பட்ட குழந்தை உடல்

எம்.பி-யின் தொழிலுக்கும் காங்கிரஸுக்கும் சம்பந்தம் இல்லை என ஜெய்ராம் ரமேஷ் கூறுகிறார். ஆனால், அந்த பணத்தில் அவர்களுக்கு பங்கு இருக்கிறதா… ஏன் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோர் ஏன் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். உலக நாடுகள் நம்மைப்பார்த்து சிரிக்கக்கூடிய அளவில் காங்கிரஸ் இந்தியாவை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. காந்திஜி நாட்டுக்காக உழைத்தார், பலர் தியாகம் செய்திருக்கிறார்கள். ஒருநாள்கூட சிறைக்கு போகாதவர்கள்கூட காங்கிரஸ் கட்சியில் அதிகாரத்தில் இருந்துகொண்டு, நாட்டை அவமானப்படுத்துகிறார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அடமானம் வைத்துவிடுவார்கள், ஏன் விற்றுகூட விடுவார்கள். நாட்டில் வாழும் 140 கோடி மக்களும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

கேவலமான நிலையில் இருக்கும் காங்கிரஸை தண்டிக்கும் பொறுப்பு, நாட்டு மக்களுக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற முகமூடியையும், மக்கள் பிரதிநிதிகள் என்ற முகமூடியையும் வைத்துக்கொண்டு நடக்கிறார்கள். மத்திய அரசு கடுமையாக இருந்தபோதும் இப்படி நடக்கிறது. விஞ்ஞானரீதியாக கொள்ளையடித்த காங்கிரஸின் பார்ட்னர்கள் தமிழகத்தில் உள்ளனர். இதுவரை எந்தக் கூட்டணியிலும் புள்ளி வைத்து பார்த்திருக்கிறார்களா… ஆனால் அவர்கள் இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையே புள்ளி வைத்துள்ளார்கள். அது எல்லாமே கொரோனா புள்ளிகள்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மிக மோசமான அவலமான நிலைக்கு தமிழகத்தின் தலைநகரம் தள்ளப்பட்டிருக்கிறது. 4,000 கோடி ரூபாய் செலவுசெய்துவிட்டோம் ஒருசொட்டு தண்ணீர்கூட நிற்காது என்றார்கள். இப்போது பாதிதான் செலவு பண்ணினோம் என்கிறார்கள். பாதி பணம் என்ன ஆனது என மக்கள் கேட்கிறார்கள். குழந்தைகளுக்குப் பால் இல்லை என அமைச்சரிடம் கேட்டால், வியாக்கியானம் பேசுகிறார். இதற்காகவா அவரை அமைச்சர் ஆக்கி வைத்துள்ளோம். குழந்தைகளுக்கு பால், பசித்தவர்களுக்கு உணவு, மாற்ற உடை வேண்டும். இதையெல்லாம் அரசு தரவில்லை. நேற்று கர்ப்பிணியின் இறந்த குழந்தையை அட்டைப்பெட்டியில் வைத்து கொண்டுபோயிருக்கிறார்கள். அந்த உயிருக்கு என்ன பதில். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக ஆம்புலன்ஸ் இல்லை, கார் இல்லை. மீன் வண்டியில் அங்கு கொண்டுபோன பிறகும் அட்மிட் பண்ணவில்லை. அந்த குழந்தை இறந்துவிட்டது. குழந்தையை மருந்து பொருள்கள் வந்த அட்டைப்பெட்டியில் வைத்து அனுப்பியிருக்கிறார்கள். தங்கப்பெட்டியிலா கேட்டார்கள், ஒரு துணியில் வைத்து கொடுத்திருக்கலாமே. யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற அகந்தையில் இந்த அரசு உள்ளது. அரசு தண்டிக்கப்பட வேண்டும்.

சென்னை வெள்ளம்

இவர்கள் ஆட்சியில் இருக்க அருகதை அற்றவர்கள். ஏன் இந்த கேவலமான நிலை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. பிற மாநிலம், பிற நாட்டவரும் தொழில் தொடங்க முடியாத அளவுக்கு சென்னையின் நிலை ஏற்பட்டுள்ளது. 2015-ல் வெள்ளம் வந்தது. 8 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்தமுறை நாம் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என, 4,000 கோடி ரூபாய் பணத்தை ஸ்வாகா செய்துவிட்டார்கள். கடவுள் அதைக் காட்டிக்கொடுத்துவிட்டார். நம்மூர் மந்திரியிடம் பால் பற்றி கேட்டால், வியாக்கியானம் பேசியிருக்கிறார். வெள்ளம், புயல் வருவதாக எத்தனை நாள்களாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் ஃபீல்டில் கிடையாது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஸ்டாலின், மோடி

எல்லோரும் வெள்ளத்தில் இருக்கிறார்கள். வீடுகளில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பலரும் வீட்டில் இல்லை. மக்களுக்கு நிவாரணம் 6,000 ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறீர்கள். அதை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மத்திய அரசிடம் நிவாரணம் கேட்கும்போது அழுத்தம் கொடுத்து வாங்க வேண்டும் என்பதை நான் உறுதியாகச் சொல்லுவேன். ஆனால், இன்றைய தமிழக அரசின் சூழலைப் பார்க்கும்போது எதுவும் செய்யமுடியாத நிலை உள்ளது. மழை கணக்குச் சொல்ல அரசு அமைக்கப்படவில்லை. வானமே பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் மக்கள் வாழ வழிசெய்ய வேண்டும். அப்படி பாதுகாப்பான மாநிலத்தை எங்கள் அரசால் உருவாக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.