கர்நாடகாவில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் விஞ்ஞானி.. போலீஸ் விசாரணை

மங்களூரு:

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா ஆர்யபு கிராமத்தைச் சேர்ந்தவர் பாரத் (வயது 24). இவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஐதராபாத் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்திருந்த பாரத் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களாக டிஆர்டிஓ அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்த பாரத், கடந்த வாரம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரி போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன்பிறகு மன உளைச்சலில் இருந்த பாரத், அன்று இரவில் தன் அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.