Remembering ICC World Cup 2023: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற்றது. கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் நவ.19ஆம் தேதி வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக நடைபெற்றது. டி20 யுகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டில் இந்தாண்டு இந்த உலகக் கோப்பை இருந்ததால் ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டாக மாறியது எனலாம். அனைத்து அணிகளும் இந்தாண்டில்தான் அதிக ஒருநாள் போட்டிகளை சமீப ஆண்டுகளில் விளையாடி உள்ளன.
நடந்து முடிந்த இந்த உலகக் கோப்பையில் ஆரம்பத்தில் இருந்தே பெரும் திருப்பங்களும், சர்ச்சைகளும் நிரம்பிதான் இருந்தது. இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகள், ஆஸ்திரேலியாவின் தொடக்கக் கட்ட பின்னடைவுகளும் அதன் பின்னான மிரட்டல் கம்பேக், ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகளின் வெற்றிகள் ஆகியவை இந்த தொடரில் யாராலும் மறக்க முடியாது ஒன்றாகும். அதிலும் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக குவித்த வெற்றிகள் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
ஒருநாள் போட்டி என்றாலே சுவாரஸ்யம் இருக்காது என பொதுவாக கூறப்பட்டு வந்ததை தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி சுக்கு நூறாக நொறுக்கியது. இரு அணிகளின் பேட்டிங், வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு என மூன்றும் ஒன்றுக்கு ஒன்று தரமாக மோதிக்கொண்டன. அதில், தென்னாப்பிரிக்கா கடைசி வரை போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மொத்த மைதானமே ஆர்ப்பரித்தது.